சரி சரி... நான் என்ன சொன்னேன்? எட்டு வயதுக்குள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக்கொடு
அப்படியா.. ‘மநுபிரபோ என்னால் முடியவில்லை. என் பெண் குழந்தையை கட்டிக் கொள்ள எந்த பொடிப் பயலும் கிடைக்கவில்லை. அவளுக்கும் எட்டு வயது கடந்து விட்டது. இப்போது ருதுவாகி விட்டாளே...’
இப்படியாக ஒரு ஏழைத் தகப்பன் மநுவிடம் மன்றாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். மநுவிடம் வாய்வழியாக மனு போடுகிறான் எனக் கருதிக்கொள்ளுங்கள்.
அவனுக்கும்... அவனைப் போன்ற அப்பாக்களுக்கும் மநு பதில் தருகிறார்.
“பாணிக்கிரஹாப நிகா மந்த்ராஹா
கன்யா ஸ்வே ப்ரதிக்ஷதஹா...
நகன்யாஸீ...”
இது பதில் அல்ல தண்டனை. எட்டு வயதுக்குள் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணவில்லை. அவள் ருதுவாகித்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறான். அவன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?...
எட்டுவயதைத் தாண்டி, பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்கின்ற அப்பா... மநுவிடம் போட்ட மனு என்ன ஆனது?... இப்போது மந்திரி பிரதானிகளிடம் மக்கள் கொடுத்த மனு எப்படி குப்பைத் தொட்டிக்குப் போகிறதோ அதே மாதிரிதான்.
பெண்ணுக்கு எட்டு வயது வரை கல்யாணம் செய்யாமல் இருந்தாய். கன்னிகா தர்மத்தை கால்களில் போட்டு மிதித்து விட்டாயே... இது பாவம் என்று உனக்குத் தெரியாதா? இந்த பாவத்துக்கு தண்டனை என்ன என்று உனக்கு தெரியாதா?... என மநு ஸ்மிருதி அந்த அப்பாவி அப்பாக்களை பார்த்து அதட்டுகிறது.
இக்கால அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்த தண்டனையை அனுபவிப்பதை அவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள்.
அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?
“மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...”
இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது... தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.
அது என்னவென்றால்....அடே கையாலாகாத அப்பா... உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும். தவறிவிட்டாய். அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.
ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்... அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும் வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?
அதனால் உனக்கு இதோ தண்டனை.
ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.
இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.
பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல... இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது.
அடப்பாவிகளா?... வறுமையாலோ, ஜாதக தோஷத்தாலோ.. பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ணவேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வாளர்களின் கருத்து.
அதையும் தாண்டி மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு எத்தனை கடுமை?... கொடுமை?...
தாத்தாச்சாரி- இந்துமதம் எங்கே போகிறது?
No comments:
Post a Comment